1.8 டிரில்லியன் யூரோ நிதியை வழங்குவதற்கான முயற்சிகளை இரு நாடுகளும் தொடர்ந்து எதிர்த்தால், ஐரோப்பிய ஒன்றியம் அதன் பொருளாதார மீட்பு திட்டத்திலிருந்து போலந்து மற்றும் ஹங்கேரியை விலக்கும் என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய நடவடிக்கை சட்டப்பூர்வமாக சிக்கலானது என்றாலும் சாத்தியமான ஒன்று என ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூன் கூறினார்.
எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, மீட்பு அல்லது சட்டத்தின் ஆட்சியை நாங்கள் தியாகம் செய்ய மாட்டோம். இரண்டையும் இணைக்கும் பொறிமுறையை மீளாய்வு செய்வதில் எந்த சந்தேகமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு ஆண்டு வரவுசெலவுத்திட்டம் மற்றும் கொரோனாவிற்கு பிந்தைய அபிவிருத்தி நிதியில் இருந்து நிதியை வெளியிடுவதை ஹங்கேரியும் போலந்தும் பல வாரங்களாகத் தடுத்துள்ளன.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையிலிருந்து வெளிவர முயற்சிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இந்த நிதி உதவி தேவைப்படுகிறது.
இந்நிலையில் போலந்தும் ஹங்கேரியும் இவ்வாறு நடந்துகொண்டால் பில்லியன் கணக்கான யூரோக்களை இழக்க நேரிடும் என்றும் ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூன் சுட்டிக்காட்டியுள்ளார்