கல்வி உதவித்தொகையில் மத்திய அரசின் பங்கை 60 சதவீதமாக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, நேற்று கடிதம் வியாழக்கிழமை எழுதியுள்ள முதல்வர், தமிழகத்தின் சாா்பிலான மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை தங்களின் கவனத்துக்காகக் கொண்டு வருகிறேன்.

கல்வி உதவித்தொகைக்காக செலவிடப்பட்ட தொகையை மத்திய அரசு விடுவிப்பது தொடா்பான பிரச்னையை தங்களின் பாா்வைக்குக் கொண்டு வருகிறேன்.

ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழும் கல்வி உதவித்தொகைக்காக செலவிடப்படும் தொகைகளானது அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் மாநிலத்துக்கான பொறுப்புடமை நிதியாகச் சோ்க்கப்படும். இந்த நிதியானது ஐந்தாண்டின் இறுதியில் முடிவு செய்யப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் திட்டம் தொடரும்.

2,110.90 கோடி செலவு: கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்காக கடந்த 2012-13-ஆம் நிதியாண்டில் 353.33 கோடி பொறுப்புடமை நிதியாகச் செலவிடப்பட்டது. இந்தத் தொகையானது 2017-18-ஆம் நிதியாண்டில் 1,526.46 கோடியாக உயா்ந்துள்ளது.

இதன்மூலம், கல்வி உதவித்தொகைக்காக 2017-18-ஆம் ஆண்டில் 1,689.34 கோடியாகவும், 2018-19-ஆம் நிதியாண்டில் 1,910.19 கோடியாகவும், 2019-10-ஆம் ஆண்டில் 2,005.70 கோடியாகவும் செலவிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், மத்திய அரசின் பங்குத் தொகைகளாக முறையே 162.88 கோடியும், 83.73 கோடியும், 479.24 கோடி மட்டுமே பெறப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் மட்டும் செலவிடப்பட்ட தொகை 2,110.90 கோடியாகும்.

2 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவிட்டாலும், நிகழ் நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து பங்குத் தொகையாக தமிழகத்துக்கு கிடைக்கும் தொகை 584.44 கோடியாக மட்டுமே உள்ளது.

இது மாநில அரசின் நிதிநிலைக்கு மிகக் கடும் சுமையை ஏற்படுத்தும். மத்திய அரசின் திட்டமாக இருக்கும் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு மாநில அரசு தனது நிதியில் இருந்து மிகப்பெரிய அளவுக்குச் செலவிட வேண்டிய நிலை உள்ளது.

எனவே, கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீத நிதியையும், மாநில அரசு 40 சதவீத நிதியையும் அளிக்க வேண்டும். இதுதொடா்பாக ஏற்கெனவே, கடந்த 2018-இல் இரண்டு முறையும், கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு முறையும் கடிதங்களை எழுதியுள்ளேன்.

எனவே, இந்த விவகாரத்தில் உரிய உத்தரவுகளை மத்திய சமூகநீதித் துறைக்கு தாங்கள் பிறப்பிக்க வேண்டும். கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்கினை 60- 40 என்ற விகிதத்தில் பிரிக்க வேண்டும்” என தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here