திமுக தலைவர் கருணாநிதி நன்கு உடல்நலம் தேறி வருவதாக கனிமொழி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த குறைபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காவேரி மருத்துவமனையின் 4-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் டாக்டர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறார். டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சையின் காரணமாக கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியை பார்த்து, உடல் நலம் பற்றி விசாரித்தனர். இந்நிலையில் திமுக எம்.பியான கனிமொழி கருணாநிதியை பார்த்துவிட்டு வரும் வழியில், காவேரி மருத்துவமனை அருகே கூடியிருந்த பெண்களிடம் கருணாநிதி நன்கு உடல்நலம் தேறி வருவதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.