சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் டெல்லி செல்கிறார், பிரதமரை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேசவிருக்கிறார் என ஊடகங்களில் இரு தினங்களாக தலைப்பு செய்திகளாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டார்கள். அனைத்து கட்சி தலைவர்களை அவர் அழைத்து செல்ல முடியவில்லை.
ஒருவேளை அவருக்கு மட்டும் நேரம் கேட்கப்பட்டு, பிரதமரை சந்தித்து, காவிரி விவகாரம் பற்றி பேசப்போகிறார் என்று நாங்களும் எதிர்பார்த்தோம். ஆனால், காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்கு முதல்-அமைச்சருக்கு நேரம் ஒதுக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரபூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, செய்தியாளர்களிடம் முதல்-அமைச்சர் பேசியபோது கூட, ‘அதற்காக நான் செல்லவில்லை, பிரதமரிடம் இதுகுறித்து நான் பேசவில்லை’ என்று தெரிவித்தார். அதோடு, முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்றிருக்கிறார் என்ற செய்தி மட்டுமே ஊர்ஜிதமாகி இருக்கிறது.
ஒருவேளை, பிரதமரை சந்திக்க நேரம் கிடைத்தாலும், காவிரி விவகாரம் குறித்து அவர் நிச்சயமாக பேச மாட்டார். அந்த அளவுக்கு பயம் உள்ளது. தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பயன்படுத்துவாரே தவிர, காவிரி பிரச்சினை குறித்து பேசவும் மாட்டார், பேசவும் முடியாது.
குட்கா விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சொல்லி இருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. இருவரையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு, தி.மு.க. பற்றி சொல்லியிருந்தால், அமைச்சர் ஜெயக்குமாருக்கு தனியாக பாராட்டு விழா நடத்த நான் தயாராக இருக்கிறேன்.
குட்கா ஆலைக்கு அனுமதி கொடுத்ததாக தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவரை கைது செய்திருக்கிறார்கள். குட்கா ஆலைக்கு ஊராட்சி தலைவர்களால் அனுமதி கொடுக்கவே முடியாது. குட்கா விற்க அனுமதி கொடுத்திருப்பது அமைச்சர் விஜயபாஸ்கரும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் தான். எனவே, நியாயமாக அவர்கள் மீது தான் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்திருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றுகின்ற இடத்தில் மத்திய அரசு இருக்கிறது. அதை செய்ய வேண்டுமே தவிர, மத்திய அரசுக்கு பொறுப்பு இல்லை என மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொறுப்பு இல்லாமல் சொல்வது ஏற்புடையதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.