மன்னார் கிராம சேவகரின் கொலைக்கு சக பெண் கிராம சேவகர் ஒருவரே மூல காரணம் என பேசப்படுகிறது.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும், சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் என சொல்லப்பட்ட கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை (3) கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலை சம்பவம் இலங்கை முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரின் கணவன் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிரதான குற்றவாளியாக கருதப்படும் கிராம சேவகர் ஒருவரின் கணவன் வாக்குமூலத்தில் தெரிவிக்கும் போது எனது மனைவியான கிராம சேவகர் அசம்ரா அவர்கள் விஜி அவர்களிடமிருந்து பத்து லட்ஷம் ரூபாய் பணம் வாங்கியதாகவும் அதனை திரும்பி கேட்டதால் கொலை செய்ததாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
பத்து லட்ஷம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டதால் கொலை செய்தேன் என பெண் கிராம சேவகரின் கணவன் கூறிய காரணத்தை பொலிஸார் ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ, பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இவர் சொல்லும் இந்த காரணம் பின்னணியிலுள்ள வேறொரு காரணத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
தவிர பணம் கேட்டதால் கொலை செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவு, அதைவிட கொடுத்த காசை திருப்பி கேட்டு சண்டைபிடிக்கும் பழக்கமும் விஜி அவர்களிற்கு இல்லை, இந்த கருத்தை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ் அவர்களே விஜியின் இறுதி அஞ்சலி உரையில் தெரிவித்திருந்தமை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் விஜி குறித்த பெண் கிராம சேவகருக்கு பணம் கொடுத்ததாக எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார் விஜியின் மனைவி இப்படி ஒவ்வொரு கருத்துக்களும் இந்த காரணம் தொடர்பில் முரண்பாட்டை எடுத்துரைக்கின்றன.
விஜி அவர்களின் கொலைக்கு பின்னணி காரணம் ஒரு பெண் கிராம சேவகரென சொல்லப்படுவதை மக்கள் ஓரளவு ஏற்றுக்கொள்கின்றனர், ஆனால் சொல்லப்படும் காரணம்தான் முரண்பாடான கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.