பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது.

கராச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பகர் ஸமான் 101 ஓட்டங்களையும் ரிஸ்வான் 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் லொக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் பிரேஸ்வெல் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 281 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 48.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 52 ஓட்டங்களையும் டெவோன் கோன்வே 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக க்ளென் பிலிப்ஸ் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக டெவோன் கோன்வே தெரிவுசெய்யப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here