லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியும் காலி கிளேடியேட்டர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளேடியேட்டர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய காலி கிளேடியேட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தனுஷ்க குணதிலக்க 56 ஓட்டங்களையும் வோல்டன் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் உஸ்மான் ஷின்வாரி, தனஞ்சய டி சில்வா மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது, அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக அவிஷ்க பெனார்டோ 84 ஓட்டங்களையும் மினோத் பானுக 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி அணியின் பந்துவீச்சில், அசித்த பெனார்டோ 2 விக்கெட்டுகளையும் செஹான் ஜயசூரிய, அகில தனஞ்சய மற்றும் தனஞ்சய லக்ஷான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 59 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அவிஷ்க பெனார்டோ தெரிவுசெய்யப்பட்டார்