ஐ.பி.எல். ரி-20 தொடரின் 41ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
சார்ஜாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சேம் கர்ரன் 52 ஓட்டங்களையும், இம்ரான் தஹீர் ஆட்டமிழக்காது 13ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், குல்டர் நெய்ல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 115 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 12.2 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மும்பை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் சார்பாக குயிண்டன் டி கொக் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும், இசான் கிசான் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக நான்கு ஓவர்கள் வீசி 1 மெய்டன் அடங்களாக 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த ட்ரெண்ட் போல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இவ்வாறானதொரு அவமானத் தோல்வியை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.