பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய தன்னிச்சையாக பிரதமராக நியமித்தமை பொது மக்களைப் போராட்டத்திற்கு அழைத்த மிக முக்கியமான காரணியாக அமைந்தது.

இதனூடாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் ஆகிய இருவருமே இராஜினாமா செய்து சர்வகட்சி அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்குவது அவசியமானது.

மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் சங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள் தொடர்ந்து இதே கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

அதனைப் பொருட்படுத்தாமல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜதந்திர சலுகைகளைப் பயன்படுத்தி, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றது மாத்திரமன்றி, மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை, சட்டப்பூர்வ இராஜினாமாஆவணங்களைச் சமர்ப்பிக்காமல், பதில் ஜனாதிபதியாக நியமித்திருப்பது பாரதூரமான செயலாகும்.

இதனால் மக்கள் மீண்டும் ஆத்திரமடைந்து போராட்டக்காரர்களுடன் சேர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும், ரணிலின் நலனுக்கு துணைபோகும் வகையில் பல்வேறு சதிகார சக்திகளால் நாடாளுமன்றத்தை தாக்கி, ஜனநாயகத்தின் ஒரே உச்ச நிறுவனத்தை குழிதோண்டிப் புதைத்து, சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான பின்னணியை உருவாக்கும் முனைப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here