இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இன்றி, சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று நடத்தி செல்லப்பட்டுள்ளது.
களுஅகல, லபுகம வீதியில் அலுவலகத்தை சோதனையிட்ட போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களின் 301 கடவுச்சீட்டுகளும், வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல தேவையான பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தாயும் மகளும் கைது
அங்கு சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த தாய் மற்றும் மகளை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா 500,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் கொஸ்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர், தலா 35,000 ரூபாவை பத்து பேருக்கு வழங்கியுள்ளார். மேலும் இவர்கள் ஏனையவர்களிடம் பணம் பெற்றுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அதிகளவான மக்கள் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. எனவே இவ்வாறான மோசடி குழுக்களுக்கு இரையாக வேண்டாம் என பணியகம் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.