நாட்டின் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு சேவையில் ஈடுபடும் புகையிரதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய தற்போது சேவையில்லுள்ள புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புகையிரதங்களில் இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
பேருந்து கட்டண உயர்வை தொடர்ந்து புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அத்தியாவசிய ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் விலையேற்றம் காரணமாக புகையிரத திணைக்களத்திற்கு நாளாந்தம் சுமார் 15 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.