தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ளக் கூடியவர்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. எனவே, அவருடன் பேச்சு நடத்தி, தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்பது இதன் மூலம் அர்த்தமாகாது.
எனினும், மக்களின் நலனுக்காகவும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்கும்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். அவருக்கு வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை குறித்து நன்கு தெரியும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காண்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடாக இலகுவானது.
பலமான அரசைக் கட்டியெழுப்பிய பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடித் தீர்வு காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.