
அரசியல் ரீதியிலான தீர்மானத்தை முன்னெடுக்க நாட்டு மக்கள் தயாராகவுள்ளதால் தேர்தலை விரைவாக நடத்தவது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலத்தை மேலும் ஒருவருட காலத்திற்கு நீடித்துள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது. அரசியல் ரீதியிலான தீர்மானத்தை முன்னெடுக்க நாட்டு மக்கள் தயாராகவே உள்ளார்கள்.
நெருக்கடியான சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் அரசியல் ரீதியிலான தீர்மானங்களை முன்னெடுப்பார்கள்.
தற்போதைய சூழ்நிலைமையில் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்களா என்பது சந்தேகத்திற்குரியது. கோவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொது மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நடுத்தர மக்களின் நலன் குறித்து வரவு-செலவு திட்டத்தின் ஊடாக எவ்வித நலன்புரி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்தாமல் மன்றங்களின் பதவி காலத்தை மேலும் ஒருவருட காலத்திற்கு நீடித்துள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் இதுவரையில் பகிரங்கப்படுத்தவில்லை.
கோவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2020ஆம் ஆண்டு கோவிட் வைரஸ் தொற்று தீவிரமடைந்த பின்னணியில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
தற்போது மொத்த சனத்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தேர்தலை பிற்போடுவதற்கு கோவிட் தொற்றுப்பரவல் ஒரு காரணியாக அமையாது.
அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் ஆலோசனைகளை கோருவதில்லை. கூட்டணியில் காணப்படும் முரண்பாடுகளுக்கு சுமுகமான தீர்வு காண இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.