அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்கு எதிரான ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை பிரஜைகளுக்கு நிவாரணம் வழங்க ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென முன்னணி கைதிகளின் உரிமைக்கான குழு கோரிக்கை விடுத்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகும் பேரவையின் 48ஆவது அமர்வில் இலங்கை குறித்த அறிக்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகள் குறித்து குறிப்பிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கைதிகள் உரிமைகளை பாதுகாக்கும் குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிசெல் பெச்லெட்டுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனகா பெரேரா கையெழுத்திட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதம், சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் குறித்த ஐ.நாவின் விசேட தூதுவர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை குறித்து மீளாய்வு செய்கையில், நீண்ட காலமாக தடுத்து வைத்திருப்பவர்கள் குறித்து கரிசனை செலுத்துமாறு, ஐரோப்பிய நாடாளுமன்றத்திடம் அந்த கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தனிமனித சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் துன்புறுத்தல்களுக்கு தீர்வு காணுதல் என்ற தலைப்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டம் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்டதாகவும், எனினும் இது தற்போது இலங்கை சட்ட அமைப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், நாட்டில் எந்த கிளர்ச்சியும் வன்முறையும் இல்லாத போதிலும், இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு வேறு நோக்கம் உள்ளமை தெளிவாவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கப்பட்ட பரந்த அதிகாரங்கள் ஊடாக, நீதிமன்றத்திற்கு அறிவிக்காத சட்டவிரோத கைதுகள், தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்துதல் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி பல்வேறு இடங்களில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டல் ஆகியவற்றுக்கு வாய்ப்புகள் காணப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு நிவாரணம் வழங்க மூன்று பேர் கொண்ட குழுவை இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள விடயமும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்கு முரணான விதிமுறைகளைக் இந்த சட்டம் கொண்டிருப்பதால், பல சமயங்களில் இந்தச் சட்டத்தைத் மீளமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கமைய 21.01.2021 மற்றும் 12.02.2021 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவை இலங்கை அரசு நியமித்துள்ளதோடு, அதன் இடைக்கால அறிக்கை 20.07.2021 அன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி சேனக பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இடைக்கால அறிக்கை அல்லது அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை செயற்படுத்தத் தவறியுள்ளதாக சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கம் ஒத்திவைத்தல் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால், கைதிகள் தமது வாழ்நாளை இழக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரின் புகழ்பெற்ற கவிஞர் அஹ்னாப் ஜசீம், முக்கிய மனித உரிமை சட்டத்தரணி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க, கட்சித் தலைவர்கள் அசாத் சாலி மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கமைய, இந்த சட்டத்தின் சட்டவிரோதம் மற்றும் மனிதாபிமானமற்ற தன்மை காரணமாக ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட முடிந்தது” 12 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றம் சாட்டப்பட்ட 11 சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் பற்றிய விரிவான அறிக்கையையும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக பல வருடங்களாக சட்டவிரோதமாக மக்களை தடுத்து வைத்து அவர்களின் உரிமைகளை நசுக்க முடிந்துள்ளதாக சட்டத்தரணி சேனக பெரேரா, கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, ஜிஎஸ்பி சலுகையைப் பாதுகாப்பதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கான தனது ஆர்வத்தை சர்வதேச சமூகத்திறகு காட்டும் வகையில், அரசாங்கம் மோசடியான செயலில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடல்களில் இந்த விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி சேனக பெரேரா குறித்த கடிதத்தின் ஊடாக கோரியுள்ளார்.