சமூக ஊடகங்களில் போலி செய்திகளை பகிர்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி இவ்வாறானவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் 120, 286, 286 ஏ, 291 ஏ, 291 பி, 345, 365 டி, 402, 403, மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம்.
தண்டனைச் சட்டம், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் பிரிவு 3, கணினி குற்றச் சட்டத்தின் பிரிவு 06, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 02 மற்றும் 03, 1979 ஆம் ஆண்டின் 48, மற்றும் 1927 ஆம் ஆண்டின் 04 என்ற ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசேட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை போலியான செய்திகளை பகிர்ந்தமைக்காக அண்மையில் கைது செய்யப்பட்ட ஒருவர், குறித்த தண்டனை சட்டக்கோவைக்கு அமைய கைது செய்யப்பட்டதாகவும் பின் 200,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.