மக்களுக்குப் பொருட்கள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பிரதான வீதிகளில் மட்டுமன்றி உபவீதிகளையும் பயன்படுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், மக்களுக்குத் தேவையான பொருட்களை விநியோகம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உலர் உணவுப்பொருட்கள் , துரித உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது , விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பிரதான வீதிகளை மாத்திரமே பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகப் பிரதான வீதிகளில் இன்றி ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அதனால் இவ்வாறு விநியோக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் பிரதான வீதிகளில் மட்டுமன்றி ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு பகுதியில் மாத்திரம் பொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறுவதால் , அந்த பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடுவதாகவும் தெரியவந்துள்ளது.

அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டும். இதேவேளை இவ்வாறு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சுகாதார சட்டவிதிகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here