வெலிமடை-கெப்பட்டிபொல பகுதியில் இரு வான்கள் நேருக்கு நேர் மோதி, விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுங்காயமடைந்தவர்களில் 7பேர் வெலிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தோடு, 10பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில், கெப்பட்டிபொல சந்தியில் நிகழ்ந்துள்ளது.
வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் கதிர்காமம் பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்ற வான் ஒன்றும் நுவரெலியாவிலிருந்து கதிர்காமம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு வான் ஒன்றமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவ்விபத்துடன் தொடர்புடைய இரு வான் சாரதிகளையும் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.