புதிய இணைப்பு
நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக நோட்டன் எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றுக்கு மேலிருந்து பாரிய கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்து எண்ணை நிரப்பு நிலையத்தின் அமைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கட்டத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி, ஒரு வேன் ஆகியன சேதமடைந்துள்ளன.
குறித்த மண்சரிவு ஏற்படும் போது அதில் எவரும் இல்லாது இருந்ததன் காரணமாக எவருக்கும் சேதமேற்படவில்லை. இதே நேரம் நோட்டன் தியகல பிரதா வீதிகள் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை வீதி போக்குவரத்து அதிகார சபையினால் வீதியில் கொட்டிக்கிடந்த பாரிய கற்கள் மற்றும் மண்ணை அகற்றியதன் காரணமாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.
குறித்த வீதியில் மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்விடங்களில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன.
இதே நேரம் ஹட்டன் – காசல் ரிஊடான நோட்டன் வீதியிலும் பல இடங்களில் மண்வரிவு ஏற்பட்டுள்ளன. தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனாலும் பல இடங்களில் மண்சரிவு அவதானம் காணப்படுவதனாலும் இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு தினங்களாக நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக லக்ஸபான மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர்த்தேக்கங்களின் கீழ் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சாரசபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் என்றுமில்லாத அளவுக்கு குறைவடைந்தன இதனால் நீர் மின் உற்பத்தியும் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்தன.
இந்நிலை தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதனால் நீர் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், நீர் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக மின்சார சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை காசல்ரி மற்றும் மவுசாக்கலை பகுதிகளிலும் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால் அந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகின்றன.
கடந்த காலங்களில் நீர் வற்றியதன் காரணமாக தென்பட்ட பழய கட்டங்கள் மற்றும் சிறிய தீவுகள் ஆகியன தற்போது படிப்படியாக மூழ்கி வருகின்றன.