காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டத்தின் மீது கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து இலங்கை வைத்திய நிபுணர்கள் சங்கம் இன்றையதினம் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாகச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டத்தின் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள போது இவ்வாறு தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டமை ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்ட வன்முறையாகப் பார்க்கிறோம். அவசர சத்திர சிகிச்சை தவிர்ந்த ஏனைய எவ்வித சிகிச்சைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை.தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை மேற்கொள்ள மாட்டோம். இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு மனம் வருந்துவதோடு ஜனநாயகத்தையும் தேசபக்தியையும் விரும்பும் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.