பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதையடுத்து வவுனியாவில் பட்டாசு கொளுத்தி மக்களால் மகிழ்ச்சி ஆரவாரம் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களைத் தாக்கியிருந்தனர்.
இதனையடுத்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன், கொழும்பு காலிமுகத்திடல் போராட்டகளம் உக்கிரமடைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார். இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்த நிலையில் வவுனியா – இலுப்பையடி சந்தியில் நேற்று மாலை 6 மணியளவில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாசவின் ஏற்பாட்டில் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.