நவாலியில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அதிகாலை 3.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த வாள்வெட்டு குழு ஒன்றே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் வீடிற்குள் புகுந்து வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டு கும்பலில் ஒருவரை வீட்டிலிருந்தவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சபை வீதி நவாலி வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றினுள், நிறுத்திவைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனத்தின் மீது பெற்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
பின்னர் வீட்டிலிருந்த இளைஞன் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவேளை இளைஞன் தப்பித்த நிலையில் இளைஞனின் தந்தையான நடராசா அருள் றொபின்சன் (வயது 48) என்பவர் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அயலவரின் உதவியுடன் வாள்வெட்டு கும்பலில் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரிடம் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபரை மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபரை மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.