நுவரெலியா – ஹட்டன் வீதியில் இரண்டு லொறிகள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நானு ஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துத் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான லொறியொன்று பட்டிப்பொலயிலிருந்து கொழும்பு நோக்கி சிலிப்பர் மரக்கட்டையை ஏற்றிச் சென்றுள்ளது.
அதன் போது செங்குத்தான ரதெல்ல குறுக்கு வீதியில் மற்றுமொரு லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிரே வந்த லொறியுடன் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மற்றைய லொறியும் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு லொறிகளில் பயணித்த இருவர் மற்றும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான லொறியின் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பாக நானுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.