யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அராலி செட்டியார் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞருடன் பயணித்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளதாகவும், வீதி அபிவிருத்தி நிறைவடைந்த போதும் வீதியின் ஓரத்தில் போடப்பட வேண்டிய எல்லைக்கோடு இன்னமும் போடப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் குறித்த இடத்தில் வேகக் கட்டுப்பாட்டு தடை போடப்படவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவத்தில் வட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வந்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதுடன் அல்பினோ வசந்த் (வயது 20) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மன்னார் பெரிய பாலம் பிரதான சோதனைச் சாவடி அருகில் குளிர்பான பொருட்களை ஏற்றி வந்த லொறியுடன் டிப்பர் வாகனம் ஒன்று மோதியதில் விபத்து சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
இவ் விபத்து சம்பவம் இன்று (12) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, குளிர்பான பொருட்களை மன்னாரிற்கு ஏற்றி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள கூராய் ஆற்றுப் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்து வாகனத்தில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.