வவுனியாவில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 45 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் கோவிட் மரணங்கள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அசமந்தமாக இருப்பதாகச் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் மரணங்களின் அதிகரிப்பு தொடர்பில் கேட்டபோதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கோவிட் மரணங்கள் நாளுக்குநாள் மிக வேகமாக அதிகரித்துச் செல்கின்றன. ஒரு வாரத்திற்கு ஒரு மரணம் என இருந்த நிலையில் கடந்த வாரம் 45 மரணம் சம்பவித்துள்ளது.
நாட்டில் ஏற்படும் மரண வீதத்தில் வவுனியாவில் மரணிப்போரின் தொகை பாரியளவில் காணப்படுகின்றது.
வவுனியாவில் மக்களின் அசமந்தமான செயற்பாட்டால் மரண தொகை கட்டுக்கடங்காமல் செல்கின்றது. எனினும் மக்கள் இதன் பாரதூரமான தன்மையை உணரவில்லை.
இது பாரிய ஆபத்தான நிலைப்பாடாக உள்ளது. இதேவேளை தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்.
மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதானது தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் புதிய கோவிட் கொத்தணிகளை உருவாக்கிவிடலாம்.
வவுனியா மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதால் அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பதை மனதில் கொண்டு ஒரே தடவையில் ஊசி ஏற்றும் நிலையங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளனர்.