மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் குறித்து 116 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையின் 11 சிறை அதிகாரிகள், இரண்டு மருத்துவர்கள் மற்றும் 25 கைதிகளிடமிருந்து நேற்று மாத்திரம் 38 அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 06 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த மோதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன கூறினார்.
மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு கடந்த வாரம் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
அதன்படி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 104 பேர் காயமடைந்து றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களுள் காயமடைந்த 71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, உயிரிழந்த 11 பேரில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது