மன்னார் மாவட்டத்தில் முதன் முறையாக 10 இடங்களில் இன்று வியாழக்கிழமை (12) காலை எச்.ஐ.வி தொற்று நோய்க்கான பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளது.
இன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 .00மணிவரை தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.என்.கில்றோய் பீரீஸ் தலைமையில் குறித்த பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளது.
எச்.ஐ.வி பரிசோதனை தினத்தை இந்த வருடம் மன்னாரில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலே குறித்த பரிசோதனைகள் மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 10 இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் குறித்த பரிசோதனைகள் இரகசியமாகவும்,பொதுவாகவும் இடம் பெற்றதோடு, பரிசோதித்து ஒரு சில நிமிடத்துக்குள் இந்த நோயால் அந்த நபர் பீடித்து இருக்கின்றாரா ? இல்லையா? என்பதனையும் இரகசியமான முறையில் தெரியப்படுத்தியுள்ளனர்.
குறித்த பரிசோதனைகளின் போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





