வவுனியா பரக்கும் மகாவித்தியாலயத்தில் ஆபத்தான குளவிகள் கலைந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தாக்கியமையால் அப்பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டு உடனடியாக பாடசாலை மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால் இன்று பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தந்திருந்த போதும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகையால் பாடசாலையை அதிபரினால் மூடப்பட்டதையடுத்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச்சென்றிருந்தனர். இதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மூவருக்கும் குளவி தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி பாடசாலை, நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இக் குளவிக்கூடுகள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இதனை அழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.