முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தேவையென்பதைத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றோம்.
ஆனால் பின்தங்கிய பிரதேசங்கள் என்பதால் வைத்தியர்கள் இங்கு வருவதற்கு விரும்புவதில்லை என பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு நட்டாங்கண்டல் வைத்தியசாலை, துணுக்காய் வைத்தியசாலை மற்றும் ஐயன்கன்குளம் வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் நியமிக்கப்படாமை தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மேற்படி மூன்று வைத்தியசாலைக்கும் வைத்தியர்கள் தேவையென்பதை சுட்டிக்காட்டி வருகின்றோம். பின்தங்கிய பிரதேசங்கள் என்பதால் வைத்தியர்கள் இங்கு வருவதற்கு விரும்புவதில்லை.
தற்போது வைத்தித்துறையில் படிப்பை முடித்திருக்கின்ற வைத்தியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதனால் இவ்வைத்தியசாலைகளில் சேவை பெற வேண்டிய நோயாளிகள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மல்லாவி வைத்தியசாலைக்கும் ஏனைய தனியார் வைத்தியசாலைக்கும் செல்கின்றனர்.
இதனையடுத்து, குறித்த வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்களை நியமிக்குமாறு பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைத்தியர்கள் கிடைக்கும் பட்சத்தில் தற்காலிகமாகவே இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐயன்கன்குளம் மற்றும் நட்டாங்கண்டல் வைத்தியசாலைகளின் நோயாளர் காவுவண்டிகள் சேவையில் ஈடுபட்டுவருவதனால் அங்கும் வரும் நோயாளிகளை உடனடியாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சிகிச்சை வழங்கக்கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.