இலங்கையில் வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் புதிய நடைமுறையொன்றை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் ஆரம்பம்
அதன்படி அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கலந்துரையைாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கம்
அந்த வகையில், வாகன இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் 3, 4, 5, 6 ஆகிய இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகன இலக்க தகட்டில் 6, 7, 8, 9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் குறித்த நடைமுறை எப்போது முதல் செயற்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.