சசிகுமார்-நந்திதா ஜோடியாக நடித்துள்ள படம் ‘அசுரவதம்’. மருதுபாண்டியன் டைரக்டு செய்துள்ளார்.
அசுரவதம் படத்தில் தன்னுடன் நடிக்க சில கதாநாயகிகள் தயங்கியதாக சசிகுமார் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘அசுரவதம் படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் அதிகம் இருக்கும். அசுரனை அழிக்கும் கதை. இதில் காதல் காட்சிகள் இல்லை. கதாநாயகி எனது மனைவியாக நடிக்க வேண்டும். இதற்காக சில கதாநாயகிகளை அணுகிய போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டனர். ஆனால் நந்திதா கதையை கேட்டு நடிக்க சம்மதித்தார். படத்தில் அறிமுக காட்சியில் அவர் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

கொடைக்கானலில் கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தினோம். இந்த படத்தை நான்தான் தயாரிப்பதாக இருந்தது. லலித் ஆசைப்பட்டதால் அவர் தயாரிக்க முடிவானது. உங்கள் மீது நம்பிக்கை உள்ளது என்று சொல்லி பட வேலைகளில் அவர் தலையிடவே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்து சிறந்த படமாக வந்துள்ளது என்று பாராட்டியபோது மகிழ்ச்சியாக இருந்தது.

வில்லன் கதாபாத்திரம் படத்தில் வலுவாக இருக்கும். இது நல்லவன் கெட்டவன் பற்றிய படம். இந்த காலத்துக்கு தேவையான ஒரு சமூக கருத்தும் படத்தில் இருக்கும். எனக்கு அதிகமாக கிராமத்து கதையம்சம் உள்ள படங்களே வருகின்றன. ஒரே மாதிரி படங்களில் நடிப்பதாக இமேஜ் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

ஏற்கனவே நான் நடித்த படங்களில் இருந்து அசுரவதம் வேறுபட்டு இருக்கும். கிராமத்து படங்களில் நடிப்பதற்காக எனக்கு வருத்தம் இல்லை. அதில் வித்தியாசமான கதைகள் நிறைய உள்ளன. தற்போது 4 படங்கள் கைவசம் உள்ளன. அவற்றை முடித்து விட்டு மீண்டும் படங்கள் டைரக்டு செய்வேன்’’.

இவ்வாறு சசிகுமார் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here